Friday, September 2, 2016

தெரிந்துசெயல்வகை


பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: தெரிந்துசெயல்வகை.

குறள் 461:
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும் 
ஊதியமும் சூழ்ந்து செயல்

(
ஒரு செயலைத் தொடங்குமுன்) அதனால் அழிவதையும், அழிந்தபின் ஆவதையும், பின்பு உண்டாகும் ஊதியத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்.

குறள் 462:
தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு 
அரும்பொருள் யாதொன்றும் இல்.

ஆராய்ந்து சேர்ந்த இனத்துடன் (செயலைப்பற்றி) நன்றாகத் தேர்ந்து, தாமும் எண்ணிப் பார்த்துச் செய்கின்றவர்க்கு அரிய பொருள் ஒன்றும் இல்லை.

குறள் 463:
ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை 
ஊக்கார் அறிவுடை யார்.

பின் விளையும் ஊதியத்தைக் கருதி இப்போது உள்ள முதலை இழந்துவிடக் காரணமான செயலை அறிவுடையவர் மேற்கொள்ளமாட்டார்.

குறள் 464:
தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும் 
ஏதப்பாடு அஞ்சு பவர்.

இழிவு தருவதாகிய குற்றத்திற்கு அஞ்சுகின்றவர் ( இன்ன ஊதியம் பயக்கும் என்னும்) தெளிவு இல்லாத செயலைத் தொடங்கமாட்டார்.

குறள் 465:
வகையறச் சூழா தெழுதல் பகைவரைப் 
பாத்திப் படுப்பதோ ராறு.

செயலின் வகைகளை எல்லாம் முற்ற எண்ணாமல் செய்யத் தொடங்குதல் பகைவரை வளரும் பாத்தியில் நிலைபெறச் செய்வதொரு வழியாகும்.

குறள் 466:
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க 
செய்யாமை யானுங் கெடும்.

ஒருவன் செய்யத்தகாத செயல்களைச் செய்வதனால் கெடுவான்; செய்யத்தக்க செயல்களைச் செய்யாமல் விடுவதனாலும் கெடுவான்.

குறள் 467:
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் 
எண்ணுவம் என்பது இழுக்கு.

(
செய்யத் தகுந்த) செயலையும் வழிகளை எண்ணிய பிறகே துணிந்து தொடங்க வேண்டும். துணிந்தபின் எண்ணிப் பார்க்கலாம் என்பது குற்றமாகும்.

குறள் 468:
ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று 
போற்றினும் பொத்துப் படும்.

தக்கவழியில் செய்யப்படாத முயற்சி பலர் துணையாக நின்று (அதை முடிக்குமாறு) காத்த போதிலும் குறையாகி விடும்.

குறள் 469:
நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர் 
பண்பறிந் தாற்றாக் கடை.

அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவர்க்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால் நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும்.


குறள் 470:
எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு 
கொள்ளாத கொள்ளாது உலகு.

தம் நிலைமையோடு பொருந்தாதவற்றை உலகம் ஏற்றுக் கொள்ளாது. ஆகையால் உலகம் இகழ்ந்து தள்ளாத செயல்களை ஆராய்ந்து செய்ய வேண்டும்..


No comments:

Post a Comment